கல்லூரி மாணவிகளை தகாத முறையில் படமெடுத்து மிரட்டிய நபர்

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தகாத முறையில் படம் எடுத்து மிரட்டி வந்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியின் தந்தை ஒருவர், அடையாறு பொலிஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கல்லூரியில் படிக்கும் எனது மகளிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், குறித்த இளைஞன் என் மகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளான்.

இதை நம்பிய என் மகளும் அவன் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க ஆடையில்லாத படத்தை அனுப்பியுள்ளாள்.

தற்போது அதை வைத்துக் கொண்டு என் மகளை மிரட்டி வருகிறான், அதுமட்டுமல்லாமல் என் மகளின் தோழிகளுக்கும் மிரட்டல் விடுத்து வருகிறான்.

எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வழக்குபதிவு செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், குறித்த நபரின் பெயர் அருண் கிறிஸ்டோபர் என்பதும், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அருணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 2 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.